கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் பிரசாந்தும் தியாகராஜனும் வழங்கியுள்ளார்கள்.
அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் பிரசாந்த் மற்றும் அவருடைய தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோர் கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார்கள்.
பிறகு செய்தியாளர்களிடம் தியாகராஜன் கூறியதாவது:
முதலமைச்சரை மரியாதை நிமிர்த்தமாகச் சந்தித்தேன். கரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் நிதி அளித்துள்ளேன். முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். கலைஞரைப் பார்ப்பது போலவே உள்ளது என்றார்.