
எனிமி படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவிடாமல் அண்ணாத்த பட தரப்பு மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதாக தயாரிப்பாளர் வினோத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு, விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னை நம்பி வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதேபோல் விநியோகிஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டில் இன்பம் காண வேண்டும், நட்டமடையக் கூடாது என்று கூறி மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாமல் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.
இதனையடுத்து அண்ணாத்த மற்றும் எனிமி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டன. இந்த நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், விநியோகிஸ்தர்கள் தரப்புக்கு, ஒரு பெரிய படத்துக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என மறைமுக உத்தரவு வருகிறது. இதனால் என்னுடைய படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனிமி திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் போதுமானது என தயாரிப்பாளர் வேண்டுகோள் வைத்துள்ளார். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்படும். என்றார்.
அண்ணாத்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆளுங்கட்சிக்கு நெருக்கமானது. மேலும், அதனை விநியோகிக்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினுடையது. அதனால் அவர் தனது சக்தியைப் பயன்படுத்தி மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதாக தயாரிப்பாளர் கூறுகிறார் என ஒரு தரப்பும், தயாரிப்பாளர் பாஜக ஆதரவாளர் என்று மற்றொரு தரப்பும் கூறுகின்றனர். எனிமி படத்துக்கு திரையரங்குகள் கிடைக்குமா அல்லது படத்தின் வெளியீடு தள்ளிப்போகுமா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.