கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில் அவருடைய ரசிகர்கள் பலர் மருத்துவமனை முன் திரண்டிருக்கிறார்கள்.
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வந்த புனித், அப்பு என்றும், பவர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டவர். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, கன்னட திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் புனித் ராஜ்குமார்.
இன்று காலை உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன் திரண்டிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவாகிவருகிறது.