போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
போதைப் பொருள் கும்பலுக்கும், தெலுங்கு திரையுலக பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டது.
இந்த சம்பவத்தில் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, நடிகர்கள் நவ்தீப், தருண், ரவி தேஜா, நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த வழக்கில் பண மோசடியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'தடையற தாக்க', 'தீரம் அதிகாரம் ஒன்று', 'என்ஜிகே', 'ஸ்பைடர்' ஆகிய படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் போதைப் பொருள் வழக்கில் சமீபத்தில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் இன்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறேக அவருக்கு இந்த வழக்கில் உள்ள தொடர்பு குறித்து தெரியவரும்.