வரலாற்றைக் குரானிலும் பைபிளிலும் புராணங்களிலும் தேடாதீர்கள் என மூடர் கூடம் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.
'மூடர் கூடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நவீன். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூடர் கூடம்', ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்ததாக அவர் 'அலாவுதீனின் அற்புதா கேமரா' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.
இதனையடுத்து அருண் விஜய் - விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் 'அக்னி சிறகுகள்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு நடரஜான் சங்கரன் இசையமைக்க, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் கமல்ஹாசனனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் நவீன் அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த மீமில், ''ஒரு அம்மா தனது மகன், சின்ன வயசுல 5 வேலை தொழுகை, தினமும் 1 மணி நேரம் குர்ஆன் ஓதிட்டு நல்ல பிள்ளையாக இருந்தான். இப்ப கலாய்ச்சுட்டு எகத்தாளம் பேசிக்கொண்டும் இருக்கிறான் என்ன காரணம் என்று தெரியவில்லை என்று புலம்புவது போலவும் அதற்கு அந்த மகன் பெரியார் தான் காரணம்'' என்பது போலவும் அந்த மீம் அமைந்துள்ளது.
இந்த மீம் குறித்து பகிர்ந்துகொண்ட நவீன், ''எனக்கு 100 சதவிகிதம் பொருந்தும் மீம். 3 வது படிக்கும் போது நோம்பு இருந்தவன். 7 வது படிக்கையில் மசூதியில் பாங் கொடுத்தவன். என் பேரனுக்கு ஈமான் அதிகம் என்று பாட்டி மெச்சுவார். டிப்ளமா படிக்கையில் பாட்டியிடம் இரண்டு கேள்வி கேட்டேன். என்ன கண்ணு இப்படி மாறிவிட்டாய் என்று கேட்டார்கள். எங்கள் மாவட்டம் ஈரோடு'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த பதிவர் ஒருவர், ''தம்பி உங்களை விட பழுத்த நாத்திகர்கள் பெரியார் தாசன், முரசொலி அடியார் அவர்களே பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இஸ்லாத்தை ஏற்றது வரலாறு. அடியாரின் நான் காதலிக்கும் இஸ்லாம் படித்தால் நாத்திகர்களின் அனைத்து கேள்விகளுக்கு விடை கிடைக்கும்'' என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த நவீன், ''நீங்கள் அறிவியலும், வரலாறும் படித்தாலே போதும். இப்போதுள்ள கடவுள்களும் மதங்களும் இந்த பூமி தோன்றுவதற்கு காரணமல்ல என்பது விளங்கும். வரலாற்றை குரானிலும் பைபிலிலும் புராணங்களிலும் தேடக் கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.