விஜய் டிவி சீரியல்கள், குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர் அஸ்வின் குமார். 'ஆதித்யா வர்மா', 'ஓ மணப்பெண்ணே' போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி அவரை மக்களிடையே கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் பேசிய அஸ்வின், ''இதுவரை கிட்டத்தட்ட 40 கதைகள் வரை கேட்டிருந்தேன். 40 கதைகள் கேட்கும்போதும் தூங்கிவிட்டேன். இயக்குநர் ஹரி சொன்ன கதையில் தூங்கவில்லை. அதனால் இந்தப் படத்தில் நடித்தேன். மேலும், இந்தப் படம் படமாக்கும்போது படம் நன்றாக இல்லையென்றால் வெளியிட விட மாட்டேன் என்றேன்'' இவ்வாறு பேசினார்.
இதையும் படிக்க | 2 கோடி பார்வையாளர்கள்: சாதனை புரிந்த ‘புஷ்பா டிரைலர்’
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் படம் வெளியாகாமலேயே மிக ஆணவமாக பேசுவதாக பலரும் அவரது பேச்சை கண்டித்து வருகின்றனர். நிறைய கனவுகளுடன் இயக்குநர்கள் அவரிடம் கதை சொல்ல வந்திருப்பார்கள். அதனைக் கேட்காமல் தூங்கிவிட்டேன் என சொல்வது அவர்களை அவமதிக்கும் செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.