சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா தற்போது நடித்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இநத்ப் படம் வருகிற பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்தப் படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். வெற்றிமாறன் படத்துக்கு முன்னதாக இயக்குநர் பாலா படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருக்கிறார்.
இதையும் படிக்க | புதிய படத்துக்காக மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - இளையராஜா ?
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்துக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் பாலா கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். எழுத்து பணிகள் முடிவடைந்த பிறகே இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறாராம். பாலாவின் இயக்கத்தில் உருவான பரதேசி படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும், நாச்சியார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.