அஜித் ரசிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வலிமை படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்க திட்டமிடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், சினிமா துறையில் தனக்கென தனி முத்திரையோடு நடிக்கும் நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படம் தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளிவருகிறது.
கோவை மாவட்டத்தில் இந்த படத்தை திரையிட உரிமம் பெற்ற விநியோகிஸ்தர் நகரம் மற்றும் புற நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 12 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி முதலே அரசு அனுமதியின்றி திரைப்படத்தை வெளியிடவும், திரையரங்கு உரிமையாளர்களுடன் இணைந்து அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.
இது தவிர அஜித்குமார் மேல் அன்பு கொண்ட ரசிகர்களிடமும், பொது மக்களிடமும் அரசு நிர்ணயித்த ரூ.120 டிக்கெட் கட்டணத்தை ரூ.1000 என்று நிர்ணயித்து இப்போதே வசூலிக்க தொடங்கி விட்டனர்.
இதை மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரித்து உண்மை எனும் பட்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் மீதும் வலிமை திரைப்பட விநியோக உரிமை பெற்றவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொது மக்களும், ரசிகர்களுக்கும் சினிமா டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.