பா.ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை'யில் பசுபதியின் மனைவியாக நடித்திருப்பவர், இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மருமகள் என்ற ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கைந்து நாட்களாக சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் சார்பட்டா பரம்பரை படம் குறித்த விமரிசனங்களும், கருத்துக்களும் தான் அதிகம் காணப்படுகின்றன. அந்த அளவுக்கு இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விமரிசகர்களையும் ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்திருக்கிறது இந்தப் படம். பொதுவாக ரஞ்சித் படங்களில் அரசியல் நிச்சயம் இருக்கும். அதில் 'சார்பட்டா பரம்பரை'யும் விதி விலக்கல்ல. சார்பட்டா பரம்பரை படத்தின் கதை 1970களின் பிற்பகுதியில் நடப்பதாக காட்டப்படுகிறது. அந்தக் காலத்தைய எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியைத் தவறாக சித்தரித்திருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித்தை கண்டித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மற்றொரு பக்கம், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ''அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை திமுக மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது''என்று பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து இந்தப் பிரச்னை சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகன் ஆர்யா மட்டுமல்லாமல், அதில் நடித்திருந்த ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தனர். அந்த அளவுக்கு ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் வலுவாக அமைத்திருந்தார் இயக்குநர் ரஞ்சித்.
குறிப்பாக இந்தப் படத்தில் பசுபதிக்கும் அவரது மனைவிக்குமான காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்தப் படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்துள்ளவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அவர் வேறு யாருமில்லை. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மகனான கைசலாசம் என்பவரது மனைவி கீதா கைலாசம் தான் அவர். அதாவது பாலசந்தரின் மருமகள். இவர் எழுத்தாளரும் கூட. இந்தத் தகவல் பலரும் அறிந்திடாத தகவலும் கூட.