சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு பிறகு வெளியான படம், விஸ்வாசம் வெற்றிக்கு பிறகு சிவா இயக்கியுள்ள படம் என மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்தப் படம் வெளியாகியிருந்தது.
ரஜினிகாந்த்துடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதிஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், அபிமன்யூ சிங், ஜெகபதி பாபு என பெரும் நடிகர் பட்டாளத்துடன் வெளியான இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
சமூக வலைதளங்களில் 'அண்ணாத்த' படம் குறித்து ரசிகர்கள் பதிவிட்டு வருவதால், அண்ணாத்த என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குநர் சிவா, ''நீண்ட நாட்களுக்கு பிறகு பண்டிகை தினத்தில் படம் பார்க்கிறார்கள். அனைவரும் முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது.
அண்ணாத்த படம் இயக்கத்தில் எனக்கு ஆனந்தம். படத்தை மக்கள் ரசிப்பதில் மகிழ்ச்சி. எந்தக் காட்சியை எல்லாம் மக்கள் ரசிப்பார்கள் என நினைத்தேனோ, அந்த இடத்தில் சரியாகக் கைதட்டி ரசிக்கிறார்கள்.
ரொம்ப நெகிழ்ச்சியாகப் படம் முடிந்து வெளியே வருவார்கள். ரஜினி சார், கீர்த்தி மேடம் உள்ளிட்ட அனைவருமே அவர்களுடைய கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள் ஒரு இயக்குநராக எனக்கு மிகப் பெரிய மகழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.