அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் கமல்ஹாசனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்ததாவது, ''கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.