இயக்குநர் பேரரசு சமீபத்தில் முதல் மனிதன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ''சினிமா ஒரு பெருமைக்குரிய விஷயம். சாதியை வைத்து இப்பொழுது சிலர் பிழைப்பு நடத்துக்கிறார்கள். ஆனால் சாதி என்கிற வேற்றுமை சினிமாவில் இல்லை. சினிமா தொழிலில் யார் சாதி, மதம் பார்த்து பழகுகிறார்கள் ?
என் வாழ்க்கையில் மறக்க முடியாத மூன்று பேர். முதலில் நண்பன் யூசுப். பள்ளி காலத்து தோழன். அவனுடன் நிறைய திரைப்படங்கள் பார்ப்பேன். அவன் இல்லையென்றால் சினிமா ஆர்வம் எனக்கு வந்திருக்குமா என்பது தெரியவில்லை. என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்ததே அந்த யூசுப் தான். அதன் பிறகு நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தது ராம நாராயணன். நிறைய பக்தி படங்கள் எடுப்பார்.
அதன் பிறகு எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்தவர். என்னை இயக்குநராக அறிமுகப்படுத்தி, என்னை இயக்குநராக தெரிவதற்கு காரணமானவர் நடிகர் விஜய். அவர் தளபதி விஜய்யாக இருந்தார். இடையில் சிலர் ஜோசஃப் விஜய்யாக மாற்றிவிட்டார்கள். அவர் தன்னை கிறிஸ்தவராக நினைத்துக்கொள்ளமாட்டார். அவரும் நானும் இணைந்து பல கோவில்களுக்கு சென்றிருக்கிறோம்.
காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்தபோது பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் விஜய் சொன்னார். நாங்கள் இருவரும் சென்று வந்தோம். அவருக்கு எல்லா மதமும் ஒன்று தான். நாம் தான் அவரை கிறிஸ்தவராக பார்க்கிறோம்.
எனக்கு சினிமா ஆர்வத்தை உருவாக்கி இங்கே அனுப்பி வைத்தவர் யூசுப் ஒரு முஸ்லீம். எனக்கு தொழில் கற்றுத்தந்தவர் இந்து. எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்தது ஜோசஃப் விஜய். இவர்கள் யாரும் எனக்கு மதம் பார்த்து வாய்ப்பு தரவில்லை. சினிமா துறையில் சாதியும் இல்லை. மதமும் இல்லை. யார் சினிமாவில் சாதியை வளர்க்கிறார்களோ அவர்களை அழித்துவிட வேண்டும் என்றார்.