விருமன் பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்டுள்ளார்.
சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் இதுவரை ரூ.40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
முத்தையா இயக்கிய இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமானார். அவருக்கு இந்தப் படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது.
மேலும் இந்தப் படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, சிங்கம்புலி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஹீரோயின்
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக கஞ்சாப் பூ கண்ணால என்ற பாடல் சமூக வலைதளங்களை கலக்கிக்கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க கஞ்சா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக இந்தப் பாடல் சர்ச்சையையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தப் பாடலை எழுதிய கருமாத்தூர் மணிமாறன் ரசிகர்களிடம் மன்னிப்புக்கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, நான் கஞ்சா என்ற போதைப்பொருளைக் குறிப்பிடவில்லை. கஞ்சா பூவைத் தான் உவமையாக குறிப்பிட்டேன். இருப்பினும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.