சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் ட்வீட் செய்துள்ளார்.
யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய அளவில் கவனம் பெற்றது. மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். கேஜிஎஃப் படத்தின் 2-ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள். கேஜிஎஃப் 2 படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிகமாக வசூலித்த 2-வது ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்ற கேஜிஎஃப் 2, தற்போது ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளது. இந்திய அளவில் எல்லா மொழிகளிலும் ரூ. 900 கோடிக்கு அதிகமாகவும் உலக அளவில் ரூ. 1170 கோடிக்கு அதிகமாகவும் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தைப் பார்த்தப் பிரபல இயக்குநர் ஷங்கர், படத்தை மிகவும் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
ஒருவழியாக கேஜிஎஃப் 2 பார்த்துவிட்டேன். கதை சொல்லும் முறை, திரைக்கதை, படத்தொகுப்பு ஆகியவற்றில் நவீன உத்தி கையாளப்பட்டுள்ளது. வசனம், சண்டைக்காட்சிகளில் இண்டர்கட் ஷாட்டை (ஒரே நேரத்தில் இரு இடங்களில் நடக்கும் காட்சியைக் காண்பிப்பது) பயன்படுத்தியிருப்பது துணிச்சலான முடிவு. இது அற்புதமாக வந்துள்ளது. பலம்பொருந்திய யஷ்ஷுக்காக மாஸ் காட்சிகளுக்கான நடைமுறையை மாற்றியுள்ளீர்கள். பிரஷாந்த் நீலுக்கு நன்றி. அன்பறிவின் சண்டைக்காட்சிகள் அபாரம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.