ரச்சிதாவிடம் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டர்: ‘ரெட் கார்டு’ கொடுக்கப்படுமா?

பிக் பாஸ் வீட்டில் நடிகை ரச்சிதாவை ஒருதலையாக காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரச்சிதாவிடம் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டர்: ‘ரெட் கார்டு’ கொடுக்கப்படுமா?

பிக் பாஸ் வீட்டில் நடிகை ரச்சிதாவை ஒருதலையாக காதலிக்கும் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், செரினா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி நான்கு வாரங்கள் முடிவடைந்த நிலையில், நடன ஆசிரியரும் நடிகையுமான சாந்தி, அசல், செரினா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்ட நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக யூடியூபர் ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார்.

இதற்கிடையே முதல் வாரத்திலேயே, ரச்சிதாவை மிகவும் பிடிக்கும் என்றும் அவரை பார்த்த பிறகுதான் சின்னத்திரை தொடர்களை பார்க்கிறேன் என்றும் ராபர்ட் மாஸ்டர் அனைவரின் முன்னிலையிலும் தெரிவித்தார்.

தொடர்ந்து, அனைத்து வாரங்களிலும் ரச்சிதா எந்த அணியில் இருந்தாலும், அந்த அணிக்கு ராபர்ட் மாஸ்டர் செல்லத் தவறவில்லை. ரச்சிதாவை மூக்குத்தி என்று புனைப்பெயர் வைத்து அழைத்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வார இறுதி நிகழ்ச்சியில் நிருபர் டாஸ்க்கை கமல் நடத்தினார். அதை பயன்படுத்தி ரச்சிதாவிடம் தனது காதலை ராபர்ட் மாஸ்டர் சொல்ல முயற்சித்தார். ஆனால், டாஸ்க்கை நிறுத்தினார் கமல்.

இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நிகழ்வில் ராபர்ட் மாஸ்டர் அடிக்கடி ரச்சிதா இருக்கும் கிச்சன் பகுதியிலேயே சுற்று வருவதாக தனலட்சுமி அனைவரின் மத்தியிலும் தெரிவித்தார்.

தனலட்சுமியின் கருத்தை தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டரை நான் ஒரு குழந்தையாகதான் பார்க்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் வெளியிலும் எனக்கு பலமுறை நடந்திருக்கிறது. இப்போது உள்ளேவும் இதுதான் நடக்கிறது என்று ஷிவினிடம் ரச்சிதா புலம்பினார்.

தொடர்ந்து, ராபர்ட் மாஸ்டருடன் உட்கார்ந்து பேசிய ரச்சிதா, என்னிடம் சகஜமாக பழகுங்கள் என்று தெரிவித்தார். ஆனால், ரச்சிதா பேசி முடித்தவுடன் ‘ஐ லவ் யூ’ என்று கூறிவிட்டு எல்லாரிடமும் சொல்வதை போல் சகஜமாகதான் கூறினேன் எனத் தெரிவிக்க ரச்சிதா கடுப்பானார்.

நேற்றைய நிகழ்வின்போது பொறுமையை இழந்த ரச்சிதா, நீங்கள் எனக்கு அண்ணா மாதிரி எனத் தெரிவித்தார். ஆனால், ரச்சிதாவின் கையை பிடித்த ராபர்ட் மாஸ்டர், மைனாவை அழைத்து இன்னொரு கையில் பிடித்துக் கொண்டார். ‘மைனா நான் உனக்கு அண்ணன் என்றால் எனது கையில் முத்தம் கொடுத்து அண்ணா என்று சொல்லு’ எனத் தெரிவிக்க மைனாவும் வலது கையில் முத்தம் கொடுத்து அண்ணா என்றார்.

ரச்சிதாவையும் முத்தம் கொடுத்து அண்ணா என்று சொல் என ராபர்ட் மாஸ்டர் கட்டாயப்படுத்த சங்கடத்தின் உச்சிக்கு சென்ற ரச்சிதா, நான் கொடுக்க மாட்டேன் எனது அண்ணாவை கையெடுத்து கும்புடுறேன் என்று தெரிவித்தார்.

இந்த காட்சிகளை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், அவருக்கு ‘ரெட் கார்டு’ கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட்டு வருவதுடன் டிவிட்டரில் ராபர்ட் மாஸ்டருக்கு எதிராக ‘ஹேஷ் டேக்’கையும் ட்ரெண்டு செய்தனர்.

இவ்வளவு நாள்களாக மெளனம் காத்த ரச்சிதா, நேற்றைய நிகழ்ச்சியில் வெளிப்படையாக தனது பதிலை ராபர்ட் மாஸ்டரிடம் தெரிவித்துவிட்ட நிலையில், இதன்பிறகாவது வந்த வேலையை பார்ப்பாரா ராபர்ட் மாஸ்டர்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com