
ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்கிற பெயரே கிடையாது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் உலகளவில் ரூ.300 கோடியைக் கடந்து வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நடிகர்கள் கார்த்தி, விக்ரமுடன் இணைந்து கமல்ஹாசன் நேற்று பார்த்தார்.
திரைப்படம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ’பொன்னியின் செல்வன் திரைப்படம் மலைப்பாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என்றார். அதைத் தொடர்ந்து அவரிடம் இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜசோழனை இந்து மன்னனாக மாற்ற முயல்கிறார்கள் எனக் கூறியது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு கமல்ஹாசன், ‘ராஜராஜசோழன் காலத்தில் இந்தியாவில் இந்து மதம் என்கிற வார்த்தை கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றுதான் இருந்தது. இவற்றை ஒரே சொல்லில் இணைத்தது ஆங்கிலேயர்கள்தான்’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.