சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்குக் கருத்தரங்கில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணி ரத்னம், நடிகர் நாசர் போன்றோர் கலந்துகொண்டார்கள்.
விழாவில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் சொன்னார். தென்னிந்தியத் திரையுலகம் என்பதால் இப்போது ஆங்கிலத்தில் பேசுகிறேன். எல்லோருக்கும் புரியும் என்று அவர் தொடர்ந்து பேசியதாவது:
விழாவில் எல்லோரும் தெரிந்த முகங்களாக உள்ளார்கள். ஏழு வருடம் முன்பு மலேசியாவுக்குப் போயிருந்தேன். அப்போது, சீனர் ஒருவர் என்னிடம், நீங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். எனக்கு வட இந்தியா பிடிக்கும். அவர்கள் அழகாக இருப்பார்கள். அவர்களுடைய படங்கள் நன்றாக இருக்கும் என்றார். அவர் தென்னிந்தியப் படங்களைப் பார்த்தாரா, எதனால் அப்படிச் சொல்கிறார் என்று அவர் பேசியது எனக்கு ஒருமாதிரி இருந்தது. படங்களில் கருப்பு நிறம் கொண்டவர்களை நடிக்க வைக்க வேண்டும். கண்ணியமான கதாபாத்திரங்களை அளிக்க வேண்டும். தென்னியர்கள் இதை முக்கியமாகச் செய்யவேண்டும். நமக்கு நம் நிறம் பிடிக்கும். வட இந்தியா, தென்னிந்தியா என இல்லை. எங்கிருந்தாலும் இந்தியா தான். இங்கு ஒரு திறமையாளர் இருந்தால் வட இந்தியாவுக்குப் பலன் கிடைக்கும். அங்கு ஒருவர் திறமையாக இருந்தால் நமக்குப் பலன் கிடைக்கும். மலையாள சினிமா, தமிழ் சினிமா என்கிற எல்லைகள் உடைத்தெறியப்பட்டுள்ளன. நம் திறமை, நம் கலாசாரம் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நம் படங்களை எங்குப் பார்த்தாலும் பெருமைகொள்ளும்படி இருக்கவேண்டும். மக்களைப் பிரிப்பது எளிது. நம் ஒற்றுமையைத் தெரியப்படுத்த வேண்டிய நேரமிது. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார்.