இசைஞானி இளையராஜாவின் மிகப்பிரபலம் வாய்ந்த இசை ஆல்பம் பாகம் 2 விரைவில் வரப்போகிறது. இதற்கான அறிவிப்பை தமது சுட்டுரை வாயிலாக இளையராஜா வெளியிட்டுள்ளார்.
இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
வார்த்தைகளின்றி இசைக்கருவிகளைக் கொண்டு இளையராஜா வெளியிட்ட ஆல்பம் தான் ''ஹவ் டூ நேம் இட்''. 1986ஆம் ஆண்டு வெளியான இந்த ஆல்பம் தியாகராய சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கும் வகையில் அவர் இதனை இசையமைத்தார். திரைப்படங்களுக்காக அல்லாமல் வெளிவந்த இளையராஜாவின் முதல் ஆல்பம் இது.
இந்நிலையில், இதுபோன்று ஆல்பம் இரண்டாம் பாகம் ஏன் வரக்கூடாது? என்று இளையராஜா தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள விடியோ பரவலாகப் பரவி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, 'திரைப்படங்களில் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 என்று செல்வதைப்போல இசையில் ஏன் பாகங்கள் வரக்கூடாது என்று நீண்ட நாள்களாகவே யோசித்தேன். அதனால் ''ஹவ் டூ நேம் இட்'' பாகம் -2 சீக்கிரமாகவே வரப்போகிறது' என்று கூறினார்.
இளையராஜாவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.