இந்து கடவுளை இழிவுபடுத்தியதாக கூறி இயக்குநர் லீனா மணிமேகலை மீது உத்தரப்பிரதேசம் மற்று தில்லி மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள டொரோண்டோவில் ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா என்ற திருவிழா நடைபெற்து. இதன் ஒரு பகுதியாக சுயாதீன பட இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கிறார். இதனையடுத்து இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அரஸ்ட் லீனா மணிமேகலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைங்களில் டிரெண்டானது.
இதையும் படிக்க | மாதவனின் ராக்கெட்ரி பட வசூல் நிலவரம் குறித்து உதயநிதி கருத்து
இந்த நிலையில் லீனா இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தியதாக எழுந்ததாக அவர் மீது தில்லி மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள லீனா மணிமேகலை, ''ஒரு மாலை நேரத்தில் கனடாவில் டொரோண்டோ பகுதியில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப் பார்த்தா அரெஸ்ட் லீனா மணிமேகலை என்று பதிவிடுவதற்கு பதிலாக, லவ் யூ லீனா என ஹேஷ்டேக் போடுவார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கனடாவுக்கான இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காளி பட போஸ்டர் இந்து கடவுளை இழிவுபடுத்தியுள்ளதாக இந்து மத தலைவர்களிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் எங்களுக்கு வந்த புகார் குறித்து தெரிவிக்கப்பட்டது. கனடா அரசு நிர்வாகத்திடம் சர்ச்சைக்குரிய விஷயங்களையும் திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.