44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) துவங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில், 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவிருக்கின்றனர்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைக்கிறார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் கலந்துகொள்வர் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் செஸ் விளையாடும் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, உள் அரங்க விளையாட்டுகளில் நான் அதிகம் விரும்பும் விளையாட்டு. செஸ் விளையாடுபவர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.