அமெரிக்காவின் பிரபலமான நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவி மீது அளித்த மான நஷ்டஈடு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
'பைரேட்ஸ் ஆப் தி கரேபியன்' படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாப்பாத்திரத்தில் ஜானி டெப் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். அவர் ஆம்பர் ஹெர்ட் உடன் 2015இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2 ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
பின்னர் 2018இல் ஆம்பர் ஹெர்ட் ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் பெண்கள் எவ்வாறு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என ஒரு கட்டுரையில் தனது முன்னாள் கணவரான ஜானி டெப் மீது அவதூறுகளை எழுதினார். இதனால் ஜானி டெப்க்கு ஏராளமான அவமதிப்புகள் நடந்தது. அவருக்கு வரவேண்டிய படங்கள் தட்டிக்கழிக்கப்பட்டன. எனவே, அவர் நஷ்டஈடு கேட்டு ஆம்பர் ஹெர்ட் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
3 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த இவ்வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையாகவும் , 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் மொத்தம் 15 மில்லியன் வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை ஜானி டெப் ரசிகர்கள், “உண்மை வென்றது” என கொண்டாடி வருகின்றனர்.
“நஷ்ட ஈடு வழக்கில் ஜானி டெப் தோற்பதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சட்டத்தின் மூலமாக அவர் வெற்றிப் பெற்றுள்ளார்” என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.
“அவர் இனிமேல் மகிழ்சியாக வாழ வேண்டும். அவருக்கு இந்த வெற்றி 100% பொருத்தமானது. ஜானியின் குழுவினை பாராட்டுகிறேன். இது மகத்தான வெற்றி ” என ஒரு ரசிகர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தீர்ப்புக்கு நடிகை ஆம்பர் ஹெர்ட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.