லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான இரண்டாவது வாரத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்துவருகின்றனர்.
இந்தப் படம் 7 நாட்களில் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழக அளவில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை விக்ரம் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தெலுங்கில் இந்தப் படத்தை தெலுங்கு நடிகர் நிதின் வெளியிட்டிருந்தார். தெலுங்கில் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கு விநியோகிஸ்தர்கள் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து வெற்றிவிழா கொண்டாடினர்.
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் நடிகர் சிரஞ்சீவி தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டியுள்ளார். அப்போது நடிகர் சல்மான் கானும் உடனிருந்தார். சல்மான் கான் தற்போது சிரஞ்சீவியுடன் இணைந்து காட் ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்ரம் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை பட வெளியீடும், பார்த்திபனின் இரவின் நிழல் பட வெளியீடும் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.