இஸ்ரோ விஞ்ஞானிகள் பஞ்சாங்கம் பயன்படுத்தியதாக பேசியதற்கு நடிகர் மாதவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தை மாதவன் இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழாவில் கலந்துகொண்டு பேசிய மாதவன், இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய்க்கு பிஎஸ்எல்வி சி-25 என்ற ராக்கெட் அனுப்பும்போது பஞ்சாங்கத்தை பயன்படுத்தியதாக கூறினார். இதுபெரும் சர்ச்சையாக உருவானது.
பலரும் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இதுகுறத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''பஞ்சாங்கம் குறித்து பேசியதற்கு எனக்கு இது தேவைதான். ஆனால் 2 என்ஜின்கள் மட்டும் கொண்டு செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பிய நம் சாதனையை மறுக்க முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.