சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வருகிற மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரை முத்து என்பவர் குறிப்பிடப்பட்ட வன்னியர் சங்க அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் ''ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க , மற்ற கதாப்பாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாப்பாத்திரத்தில் நடிக்க, முக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் மட்டும் குருமூர்த்தி என்ற வன்னியராக சித்திரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் ஒரு சாதி வெறியர் போல சித்திரித்து வன்னியர்களின் சாதி அடையாளமான அக்கினி கலசத்தை அவரது வீட்டில் காட்சிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்கள் சாதி வெறி உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர்.
வன்னியர்களை கொச்சைப்படுத்தும்விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்திரித்து வரும் நடிகர் சூர்யாவின் படத்தை அவர் பொது மன்னிப்பு கேட்காத வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என வன்னியர் சங்கம் சார்பாகவும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வருகிற 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் படம் வெளியானால் பிரச்னையை சந்திக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.