மாட்டுக்கறி உண்பது தொடர்பாக நிகிலா விமல் அளித்த பேட்டி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
2009 முதல் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் நிகிலா விமல். 2016-ல் வெளியான வெற்றிவேல் படம் மூலமாகத் தமிழில் அறிமுகமானார். கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மாட்டுக்கறி உண்பது தொடர்பாக நிகிலா விமல் அளித்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பேட்டிக்காகப் பாராட்டு, விமர்சனம் இருவிதமான எதிர்வினைகளையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.
மைல்ஸ்டோன் மேக்கர்ஸ் என்கிற யூடியூப் சேனலுக்கு நிகிலா விமல் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நம் ஊரில் பசுவை வெட்டலாம். அதை வெட்டக்கூடாது என்கிற வழக்கமே இல்லை. பசுவை வெட்டக்கூடாது என்பது தற்போது கொண்டு வந்ததுதான். அது நம் பிரச்னை இல்லை. விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் எந்த விலங்குகளையும் கொல்லக் கூடாது. பசுவுக்கு மட்டும் தனித்துவமாக ஒன்றும் இல்லை. வெட்டக்கூடாது என்றால் எதையும் வெட்டக்கூடாது. வெட்டலாம் என்றால் எல்லாவற்றையும் வெட்டலாம். பசுவை மட்டும் வெட்டக்கூடாது என்றால் கோழிக்கு என்ன நியாயம்? கோழி பறவையாக இருந்தாலும் அது உயிர் இல்லையா? கோழி, மீனையும் சாப்பிடக்கூடாது என்று கூற வேண்டும். முழுமையாக சைவமாக மாறவேண்டும். அப்படி இல்லாமல் ஒன்றுக்கு மட்டும் சலுகை தரக்கூடாது. நான் எல்லாவற்றையும் சாப்பிடுவேன். சாப்பிடக்கூடாது என்றால் எதையும் சாப்பிடக் கூடாது. ஒன்று மட்டும் சாப்பிடக் கூடாது என்று சொல்வது என்னால் முடியாது என்றார்.