நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திருப்பதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பல்வேறு காரணங்களால் நட்சத்திர ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், இவ்விரு நட்சத்திரங்களின் திருமணத்தை திருப்பதியில் நடத்த அனுமதி அளிப்பதில் சில சிக்கல்களை திருப்பதி தேவஸ்தானம் எதிர்கொண்டது.
அதனால், திருப்பதியில் நடைபெறவிருந்த திருமணம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு மகாபலிபுரத்தில் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் கசிந்திருப்பதன் மூலம் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சரி அப்படி என்னதான் சிக்கல் வந்தது நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் என்று பார்த்தால்,
நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக 150 பேர் இந்த திருமண வைபவத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி கொடுப்பது என்பது இயலாது. ஏனெனில் அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படிதான் அனுமதி அளிக்கும்.
அதே வேளையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் ஏற்கனவே கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே இப்படி ஒரு நட்சத்திரங்களின் திருமணம் என்றால், அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே திருப்பதி தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால்தான் திருப்பதியில் நடைபெறவிருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவிருப்பதாகவும், சென்னையில் பிரம்மாண்டமான அளவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த காதல் ஜோடி திட்டமிட்டிருப்பதகாவும் கூறப்படுகிறது.