
வாடகைத் தாய் சர்ச்சைக்கு புகைப்படம் மூலம் பாடகி சின்மயி பதிலளித்துள்ளார்.
பாடகி பின்னணி குரல் கலைஞர் என தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களால் பரவலாக அறியப்படுபவராக இருக்கிறார் சின்மயி. வைரமுத்து மீதான இவரது மீ2 குற்றச்சாட்டு திரையுலகில் மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரனை காதல் திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. தனது குழந்தைகளுக்கு திரிப்தா, ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
சின்மயி கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதையும் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை. இதனையடுத்து அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்து, நான் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட படங்களை பகிராததால் என்னிடம் நீங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைபெற்றீர்களா என பலர் கேட்கின்றனர். நான் என்னை ஊடக வெளிச்சத்திலிருந்து பாதுகாத்துக்கொள்கிறேன் என்பது என்னை சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும் என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக நடிகை சின்மயி தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.