மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது.
பொன்னியின் செல்வன் படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ரூ. 500 கோடி என்கிற இலக்கை விரைவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தற்போது படம் பார்க்க வேண்டுமென்றால் அமேசான் பிரைம் ஓடிடியில் அதன் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் ரூ. 199 கட்டணம் செலுத்தித்தான் பார்க்க முடியும். ரூ. 199 செலுத்திய தேதியில் இருந்து 30 நாள்களுக்குள் படத்தைப் பார்த்து விட வேண்டும். மேலும் படம் பார்க்க ஆரம்பித்த 48 மணி நேரத்துக்குள் படத்தைப் பார்த்து முடித்து விட வேண்டும். படத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியாது. மேலும் அடுத்த 7 நாள்களில் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 4 முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் படம் வெளியாகவுள்ளது. அப்போது அமேசான் பிரைம் சந்தாதாரர்களால் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்க்க முடியும்.