
நடிகர்களில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித் போல எப்பொழுதும் ரசிகர்கள் அதிகம் விவாதித்துக்கொள்வது ராஜாவா ? ரஹ்மானா ? என்றுதான். அந்த அளவுக்கு இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ரசிகர்கள் மோதிக்கொண்டாலும் இருவரும் இணக்கமாகவே பழகிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன் துபையில் உள்ள ரஹ்மானின் ஒளிப்பதிவு கூடத்துக்கு இளையராஜா சென்றிருந்தார். விரைவில் அங்கு தனது படங்களுக்கு இசையமைக்கவிருப்பதாகவும் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க | எப்படி இருக்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது'? - திரை விமர்சனம்
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளையராஜாவுடன் விமான நிலையத்தில் இருக்கும் விடியோவைப் பகிர்ந்து, ''நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்புகிறோம். ஆனால் எங்களது இலக்கு எப்பொழுதும் தமிழ்நாடுதான். இளையாராஜா புதாபெஸ்டில் இருந்தும், ரஹ்மான் கனடாவில் இருந்தும் திரும்புகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இருவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா தற்போது வெற்றிமாறனின் 'விடுதலை', லக்ஷமி ராமகிருஷ்ணன் படம், தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியின் படம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துவருகிறார்.
ரஹ்மான் இசையில் தற்போது 'கோப்ரா' திரைப்படம் வெளியான நிலையில் இந்த மாதம் 15 ஆம் தேதி சிம்பு மற்றும் கௌதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு', மாத இறுதியில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.