நடிகர் விக்ரம் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவருபரின் மகன் திருமணத்தை முன் நின்று நடத்தியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இதனையடுத்து விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
மேலும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் விரைவில் விக்ரம் கலந்துகொள்ளவிருக்கிறார். அதற்கான முன்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் தனது வீட்டில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் மேரி என்பவருடைய மகன் தீபக் மற்றும் வர்ஷினியின் திருமணத்தை நடிகர் விக்ரம் முன் நின்று நடத்தியுள்ளார். பின்னர் மணமக்களுக்கு தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். நடிகர் விக்ரமின் செயல் அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.