காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 32 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கு திறக்கப்படவுள்ளது. இதில், முதல் திரைப்படமாக பொன்னியின் செல்வன், விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது.
ஸ்ரீநகரின் சிவபோரா என்ற பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டிஃபிளக்ஸ் திரையரங்கை ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைக்கவுள்ளார்.
இதுகுறித்து திரையரங்கின் உரிமையாளர் விஜய் தார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில்,
திரையரங்கு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டது. இன்று துணைநிலை ஆளுநர் திரையரங்கை திறந்து வைக்கிறார். 3 திரைகளுடன் 520 இருக்கைகள் கொண்ட மல்டிஃபிளக்ஸ் திரையரங்கிற்கு ஐநாக்ஸ் நிறுவனம் பங்குதாரராக இருக்கிறது. தற்போது இரண்டு திரைகளிலும், அக்டோபரில் மூன்றாவது திரையிலும் படம் திரையிடப்படவுள்ளது.
இதையும் படிக்க | பொன்னியின் செல்வனுடன் மோதுகிறது ’நானே வருவேன்’!
ஆமிர்கான் நடித்து வெளியாகியுள்ள லால் சிங் சத்தா திரைப்படம் இன்று சிறப்பு காட்சியாக வெளியாகவுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி பொதுமக்களுக்காக திரையரங்கு திறக்கப்படும்போது முதல் காட்சியாக விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது என்றார்.
இதற்கிடையே, மற்றொரு திரையில் பொன்னியின் செல்வம் 1 திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தெற்கு காஷ்மீரின் புல்வாமா, ஷோபியான் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு திரையரங்குகளை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்:
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 1980 வரை சுமாா் 12 திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. பின்னா், திரையரங்க உரிமையாளா்களை இரண்டு பயங்கரவாத கும்பல் அச்சுறுத்தியதால், அவை மூடப்பட்டன.
பின்னா், 1990-களில் திரையரங்குகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், 1999 செப்டம்பரில் லால் செளக்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரீகல் திரையரங்கில் பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தி அதனை முறியடித்தனா்.
இதேபோல நீலம், பிராட்வே ஆகிய திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாததால் அவை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன.