நடிகர் வடிவேலுக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது. இதனால், தேமுதிக நிர்வாகிகள் சிலருக்கும் வடிவேலுக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன.
ஆத்திரமடைந்த வடிவேலு, 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டு பல இடங்களில் விஜயகாந்த்தைக் கடுமையாக விமர்சித்தார்.
அத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. தொடர்ந்து அரசியல் காரணங்களால், வடிவேலுவை தயாரிப்பாளர்கள் அணுகாமல் இருந்தனர். இதனால், அவரின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. தற்போது, மீண்டும் தீவிரமாக நடிக்க துவங்கியிருக்கிறார்.
இதையும் படிக்க: டிரைலரா அல்லது பாடலா?: ஜவான் பட அப்டேட் கூறிய ஷாருக்கான்!
இந்நிலையில், விஜயகாந்த்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஒரு நேர்காணலில், “ கேப்டன் தன்னைப் பற்றி தவறாகப் பேசுபவர்களைப் பற்றி கவலைப்படமாட்டார். மனதிற்குள் அந்த வலி இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இயல்பாகவே இருப்பார். அவரைப் பற்றி வடிவேலு நிறைய பேசியிருக்கிறார். ஆனால், அதற்காக எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. ஆனால், வடிவேலு நடிக்காத காலத்தில் கேப்டன் என்னிடம் ’ஏன் வடிவேலு நடிப்பதில்லை. அவர் ஒரு பிறவிக்கலைஞர். அவரைத் தமிழ் சினிமா இழக்கக்கூடாது. தயாரிப்பாளர்கள் அவரை கைவிடக்கூடாது’ என்றதுடன் தனக்குத் தெரிந்த சிலருக்கு அழைத்து வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கச் சொன்னார்” எனக் கூறியுள்ளார்.