நடிகர் விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் முகத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்கமும் அவரே தான். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியன.
இதையும் படிக்க- என்றும் என் நினைவில் அம்மா - நடிகர் வடிவேலு
அவர் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி உடல் நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துவிட்டார்.
2 வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கூடிய சீக்கிரம் ரசிகர்கிட்ட விடியோ மூலமா பேசுவார், ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ம வேண்டாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.