தி கேரளா ஸ்டோரி படக்குழு இணைந்து எடுக்கும் அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்சென் இயக்கத்தில் கடந்த மே 5-ஆம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் கேரளத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடு கடத்தப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரையிடலுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது.
நாடு முழுவதும் இந்த திரைப்படம் சுமார் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | நடிகர் பிருத்விராஜுக்கு படப்பிடிப்பில் காயம்: மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்து ‘பஸ்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த திரைப்படமானது நாட்டையே புரட்டி போடக்கூடிய மறைக்கப்பட்ட உண்மை சம்பவம் குறித்தது என்று போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அதிகளவில் உள்ள பகுதி பஸ்தார். எனவே நக்சல் குறித்த திரைப்படமாக இது இருக்கலாம். மேலும், போஸ்டரில் கம்யூனிஸ்ட் கொடி இடம்பெற்றுள்ளதால், அவர்களை சம்பந்தப்படுத்தி திரைக்கதை அமைய வாய்ப்புள்ளது.
இப்படமானது அடுத்தாண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.