எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகளிடையேயும் பார்வையாளர்கள் இடையேயும் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.
இந்தத் தொடரின் வெற்றியில் முக்கிய பங்காற்றுகிறது கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள். இதனை தமிழ் சின்னத் திரை நடிகை ஒருவர்தான் எழுதி வருகிறார்.
எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் அத்தொடருக்கு வசனம் எழுதிவரும் ஸ்ரீவித்யா. இவர் கோலங்கள், ஆனந்தம், தென்றல் போன்ற தொடர்களில் நடித்தவர்.
என்னவளே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற திரைப்படங்களிலும் ஸ்ரீவித்யா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
கல்லூரி பருவத்திலிருந்தே படிப்பில் அதீத ஆர்வம் கொண்ட இவர், நடனத்திலும் தேர்ந்தவராக இருந்துள்ளார். நடனம் மூலம் சின்னத் திரை நடிகையாகவும் மாறினார்.
இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம், தென்றல் போன்ற தொடர்களில் நடித்தார்.
திருமணத்துக்குப் பிறகு சின்னத் திரையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் திருச்செல்வம் இயக்கி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வல்லமை தாராயோ தொடரில் வசனம் எழுத உதவிபுரிந்தார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பலரின் கவனத்தை ஈர்த்த எதிர்நீச்சல் தொடரிலும் வசனம் எழுதி வருகிறார். இந்தத் தொடரையும் திருச்செல்வமே இயக்கி வருகிறார்.
பழமைவாதம் நிறைந்த புகுந்த வீட்டிற்குச் செல்லும் மருமகள்கள் சந்திக்கும் இன்னல்களை இந்தத் தொடர் கருவாகக் கொண்டுள்ளது. மருமகள்கள் மூலம் கால மாற்றத்துக்கு ஏற்ப பிற்போக்குத் தனங்களை தட்டிக்கேட்கும் வகையில் எதார்த்தமாக திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் வட்டார வழக்கில் மாமனார் பேசும் வசனங்கள் மற்றும் தைரியமாக மருமகள்கள் பேசும் வசனங்கள், வீட்டில் உள்ள பாட்டி பேசும் வசனங்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே கதாபாத்திரங்களை ஒன்றிப்போகச் செய்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் ஸ்ரீவித்யா எழுதிவரும் வசனங்கள்தான் என இணையத்தில் அவரைப் பலர் புகழ்ந்து வருகின்றனர்.