ஆஸ்கர் வென்ற உதகைப் பெண்!

சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸை இயக்கியவர் உதகையை சேர்ந்த கார்த்திகி கான்சல்வாஸ்.
இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்க
இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்க
Published on
Updated on
2 min read

சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸை இயக்கியவர் உதகையை சேர்ந்த கார்த்திகி கான்சல்வாஸ்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த ரகு என்ற யானையைப் பற்றியும், அதனை வளர்த்து பராமரித்த பொம்மன் - பெல்லி பற்றியும் உருவான ஆவணக் குறும்படம்தான் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்.

இந்த ஆவணப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில் ஆஸ்கரின் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோர் விருதைப் பெற்றனர்.

இந்நிலையில், இந்த திரைப்படம் பற்றியும் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பற்றியும் எழுத்தாளர் அஜயன் பாலா முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.

“பெருமைமிக்கத்  தருணம். உதகைப் பெண் கார்த்திகி கோன்சால்வ்ஸ் எடுத்த ஆவணக் குறும்படம் ஆஸ்கர் வாங்கியிருக்கிறது .தமிழ்நாட்டுக்கு  இரண்டாவது ஆஸ்கர் தருணம். உடன் தயாரிப்பாளர் குனீத் மோங்கவுக்கும் விருது பகிரப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே ‘கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்’, ’லஞ்ச் பாக்ஸ்’ போன்ற படங்களை தயாரித்தவர்.

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வெறும் யானையைப் பற்றிய படமல்ல. பொம்மன் - பெல்லி என்ற காட்டுநாயக்க சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் வாழ்வியலை சொல்லும் படம். பெல்லியின் அப்பா புலியால் தாக்கப்பட்டு உயிரிழக்க, அவரது மகளையும் சிறுவயதிலேயே இழக்கிறார்.

பெல்லி - பொம்மன் தம்பதி
பெல்லி - பொம்மன் தம்பதி

இந்தச் சூழலில் தாயைப் பிரிந்த ரகு என்ற யானையை பராமரிக்க நேரிடுகிறது. அந்த குட்டி யானையை தங்களின் சொந்த பிள்ளையை போல வளர்க்கின்றனர் பெல்லி தம்பதி. இவர்களுக்கும் ரகுவுக்கும் இருக்கும் உறவுதான் இந்த ஆவணப்படத்தின் பெரும்பாலான காட்சிகள். குட்டியானை அவர்கள் மீது காட்டும் பாசமிக்க கட்சிகள் நெகிழவைக்கக் கூடியது. யானையோடு அவ்வப்போது வேடிக்கை பார்க்கும் வெண்ணிற காட்டு குரங்குள், காட்டு பன்றிக் குட்டிகளின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

உயரமான மலையில் காட்டு நாயக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் தேன் எடுக்கும் காட்சி ஒன்று வியப்பூட்டும் பிரம்மாண்டம். ஒரு கட்டத்தில் வனத்துறையினர் அந்த குட்டி யானையை பராமரிக்க  வேறு ஆள்களிடம் ஒப்படைக்கப்போவதாக சொல்ல, அவர்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஊட்டியைச் சேர்ந்தவர். கோவை  தனியார் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்தவர்.  நான் இரண்டுமுறை  அங்குச் சென்று சிறப்பு வகுப்புகள் எடுத்திருக்கிறேன் என்பதன் மூலம் அந்த கல்லூரியின் பெருமையமிக்க சுவற்றில் நானும் கொஞ்சம் உரசிக்கொள்ள ஒரு வாய்ப்பு.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆவணப் படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com