இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விவகாரத்தில் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இவர்களிடையே நீடித்து வரும் பிரச்னையில், சிலர் அமீருக்கு ஆதரவாகவும், சிலர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் அமீருக்கு ஆதரவாக நடிகர் சசிகுமார், இயக்குநர் பொன்வண்ணன், சமுத்திரக்கனி, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில், "நானும், கார்த்தி மற்றும் சுதா கொங்கராவும் ராம் படத்தைப் பார்க்க சொன்றோம். அப்போது அப்படத்தின் மேக்கிங் சரியில்லை என்று சுதா கொங்கரா கூறினார்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா அவரது எக்ஸ் தள பக்கத்தில் இதற்கு பதிலளித்துள்ளார். அதில், "பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று.
ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன்.
அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி..." எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ‘விமர்சிப்பதற்கும் அறம் வேண்டும்’: அமீருக்கு சினேகன் ஆதரவு