மலையாளத்தில், ‘நஞ்சுகளூடே நாட்டில் ஓரிடவேள’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவராக படிப்பை முடித்தவர் ஆர்வத்தின் காரணமாக நடிக்க வந்தார். முதல் படத்தில் பெரிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலும் அடுத்ததாக இவர் நடித்த ‘மாயநதி’, ‘வரதன்’ ஆகிய படங்கள் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து தமிழில் ‘ஆக்ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கட்டா குஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ உள்பட பல படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா லட்சுமி. குறிப்பாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்த ‘பூங்குழலி’ கதாபாத்திரமே அவரின் பிரபலத்தை மேலும் விரிவாக்கியது. அதன் மூலமே தென்னிந்திய ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார்.
பூங்குழலி கதாபாத்திரம் தன் வாழ்க்கையில் பல கதவுகளைத் திறந்து விட்டதாக ஐஸ்வர்யா லட்சுமியே கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க: வணங்கான் கண்டிப்பாக பேசப்படும்: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
இயல்பான தோற்றம், மெலிதான உடலமைப்பு என எதார்த்த தோற்றத்தில் இருந்தாலும் படத்திற்குப் படம் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் பட்டாளம் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்திற்குப் பின் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இவரின் சமீபத்திய புகைப்படங்கள் கவனத்தைப் பெற்று வருகிறது.