ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் நடிகராக களமிறங்கியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத் திரை தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரைம் டைம் எனப்படும் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் டிஆர்பி பட்டியலிலும் முதன்மை இடங்களைப் பெறுகின்றன.
அந்த வகையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. முன்பு 7.30 மணிக்கு ஒளிபரப்பான நிலையில், தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 7.30 மணிக்கு பிரியங்கா நல்காரியின் சீதா ராமம் ஒளிபரப்பாகிறது.
'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் ஸ்வாதி ஷர்மா, ஆனந்த் செல்வம் ஆகியோர் பொம்மி - சித்தார்த் என்ற முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுக்கிடையிலான காதல் காட்சிகள் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது. தற்போது நாயகி தனது பழைய நினைவுகளை இழந்துள்ளார். விரைவில் அவருக்கு பழைய நியாபகம் வந்து, இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான 'நினைத்தாலே இனிக்கும்' முன்னோட்ட விடியோவில் நடன இயக்குநர் பாபா பாஸ்கர் நடிகராக களமிறங்கியுள்ளார்.
அவ்வபோது இந்தத் தொடரில் சிறப்பு விருந்தினர்களாக திரைப் பிரபலங்கள் நடிப்பது வழக்கம். அந்தவகையில், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் நடித்துள்ளார்.
இவர், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் பலதரப்பட்ட மக்களிடம் சென்று சேர்ந்தார். நடனத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் பாபா பாஸ்கர் கலக்குவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.