நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் நடிகை ராதிகா சின்னத் திரை தொடரில் நடிக்கவுள்ளார்.
சித்தி -2 தொடருக்குப் பிறகு எந்தத் தொடரிலும் நடிக்காமல் இருந்த ராதிகா இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்கவுள்ளார்.
நடிகை ராதிகா வெள்ளித்திரையில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். வெள்ளித்திரையில் பல ரசிகர்கள் இருப்பதைப் போலவே, சின்னத்திரையிலும் ராதிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி (இரட்டை கதாபாத்திரம்), சந்திரகுமாரி, சித்தி -2 ஆகிய தொடர்களில் நடிகை ராதிகா நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மெகாதொடர்களின் பருவம் ராதிகவிலிருந்து தொடங்கியது என்றே குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அதிக அளவு இடைவேளையின்றி புதுப்புது தொடர்களில் நடித்தவர்.
தற்போது அவர் கிழக்கு வாசல் என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் இந்தத் தொடரில் நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதுவரை ராதிகா நடித்துவந்த தொடர்கள் அனைத்தும் சன் தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது ராதிகாவின் புதிய தொடரான கிழக்கு வாசல், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடரில் பூவே பூச்சூடவா தொடரில் நடித்த ரேஷ்மா மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் நடித்த அஸ்வினி ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இதனால் இந்தத் தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.