கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் பாடல், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு வெளியே படமாக்கப்பட்டுள்ளது.
இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற 'நாட்டுக்கூத்து' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க | கோல்டன் குளோப் விருதை வென்றது ‘நாட்டுக் கூத்து’ பாடல்
இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருது நிகழ்வில் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டுக் கூத்து' பாடல் வெற்றி பெற்றது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற சாதனையும் படைத்துள்ளது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாடல் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் உக்ரைன் அதிபர் வெலொதிமீர் ஸெலென்ஸ்கியின் அரசு இல்லத்தின் வெளியே படமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2022 மார்ச் மாதம் பட பிரமோஷன் விழாவில் பேசிய இயக்குநர் ராஜமௌலி, 'படத்தில் சில முக்கிய காட்சிகளை படமாக்க உக்ரைன் சென்றிருந்தோம். நாங்கள் படப்பிடிப்பில் இருந்தபோது, இப்போது போராக மாறியுள்ள பிரச்சினைகள் பற்றி தெரியாது. இந்தியா திரும்பி வந்து இப்போதுள்ள பிரச்னைகளை பார்க்கும்போது தான் அதன் தீவிரம் தெரிகிறது' என்று குறிப்பிட்டார்.
நேற்று(செவ்வாய்க்கிழமை) கோல்டன் குளோப் விருது விழாவில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் காணொலி மூலமாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.