கணவர் என் மீது வைத்திருக்கும் அன்பை கால் முறிந்து கிடக்கும் இந்த கடினமான நேரத்தில்தான் புரிகிறது என இனியா தொடரின் நாயகி ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் ஆல்யா மானசா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் தேவையான பணிகளை கணவர் சஞ்சீவ் அருகிலிருந்து கவனித்துக்கொள்வதால், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வார நாள்களின் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர் இனியா. இந்த தொடரில் ஆல்யா மானசா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ராஜா ராணி தொடரில் அதிக ரசிகர்களைப் பெற்ற ஆல்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.
இடையில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்காக ஓய்வில் இருந்தார். தற்போது இவர் இனியா தொடரில் நடித்து வருகிறார்.
இதனிடையே விபத்தில் சிக்கிய ஆல்யாவுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், கணவன் குறித்து நெகிழ்ச்சி பட பதிவிட்டுள்ளார்.
அதில், ரசிகர்களான உங்களின் பிரார்த்தனையே என்னை என் கடினமான சூழலிலிருந்து மீண்டு வரச்செய்யும். கால் முறிவால் என்னுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கால் முறிவால் என்னால் நடக்க முடியவில்லை என்றாலும் கூட நொடிக்கு நொடி முன்னேற்றமடைந்து வருகிறேன். இது உங்களின் பிரார்த்தனையால் சாத்தியமாகிறது.
இந்த விபத்தின் மூலம் என் கணவர் சஞ்சீவ் என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டேன். அவர் என்னை காதலிக்கிறார் என்பது தெரியும். ஆனால் என்னை இதுபோன்ற சூழலில் அவரால் பார்க்க முடியவில்லை. அவர் நாள்தோறும் எனக்காக அழுகிறார். இந்த வலியில் நான் தவிப்பதை அவரால் பார்க்க முடியவில்லை. சஞ்சீவ் போன்ற மனிதரை கணவராக பெற்றதால், இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக நான் என்ன உணர்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.