பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளர் அறிவிப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலர் தங்களுடைய கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல், இம்முறையும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நூறு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இறுதிப்போட்டியாளர்களாக விக்ரம், அஷீம், சிவின் ஆகியோர் இருந்தனர்.
அதில், வெற்றியாளர் யார் என்பது குறித்து நேற்று விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இதில் இறுதி வெற்றியாளராக அஷீம் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது வெற்றியாளராக விக்ரமன் அறிவிக்கப்பட்டார். மூன்றாவது இடம் திருநங்கையான சிவினுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டதில், பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால், அப்யூஸர் அஷீம், பாய்காட் விஜய்டிவி என்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர் ஒருவர், பிக்பாஸ் வீட்டை குட்டி இந்தியாவாக உருவகப்படுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அஷீம் - பிரதமர் நரேந்திர மோடியாகவும், விக்ரம் - ராகுல் காந்தியாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாநிலத்தவர்களின் வாக்குகள் அனைத்தும் அஷீமிற்கு சென்றது. விஜய் தொலைக்காட்சி தேர்தல் ஆணையம். அதானி, அம்பானிகள் - விளம்பரதாரர்கள். இதில் நடிகர் கமல்ஹாசன் - உச்சநீதிமன்றம். மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு கூற முடியாது என்பதால், முடிவு, இறுதி வெற்றி அஷீமுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.