தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஈ. ராமதாஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.
ஈ. ராமதாஸ் மறைவை அவரது மகன் கலைச்செல்வன், சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, எனது தந்தை இயக்குநர், எழுத்தாளர், நடிகர் ஈ.ராமதாஸ் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். அவரது இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈ. ராமதாஸ் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
விழுப்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ், சினிமாவில் வாய்ப்புத் தேடி சென்னை வந்தார். எழுத்தாளராக பயணத்தைத் தொடங்கிய இவர், பிறகு இயக்குநராக பல படங்களை இயக்கினார்.
இவரது இயக்கத்தில், ராஜா ராஜா தான், இராவணன், சுயம்வரம், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்கள் வெளியாகி, மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
பல படங்களில் எழுத்தாளராகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்தும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். காக்கி சட்டை, விசாரணை, அறம், விக்ரம் வேதா, மாரி 2 போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.