சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடரிலிருந்து நடிகை டெல்னா டேவிஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் தங்களின் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் அன்பே வா தொடர் 1000 எபிஸோடுகளை நெருங்குகிறது. 2020 நவம்பர் முதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் மூன்று ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது.
இந்தத் தொடரில் பூமிகா பாத்திரத்தில் நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விராட் நாயகனாக நடிக்கிறார்.
இந்தநிலையில், அன்பே வா தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கும் டெல்னா டேவிஸ் தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். டெல்னா டேவிஸ் கேரளாவை சேர்ந்தவர். இவர் வழக்கறிஞர் ஆவார். மலையாளத்தில் சில தொடர்களிலும், படங்களிலும் டெல்னா நடித்துள்ளார். பின் அன்பே வா தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அன்பே வா தொடரின் மூலம் தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
படிக்க | டாப் 5 மதிய நேர சீரியல்கள்!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்புள்ள அன்பே வா குடும்பமே, அன்பே வா தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன். அழகான நினைவுகளால் இங்கு எனக்கு மறக்க முடியாத பயணம் கிடைத்தது. அற்புதமான மனிதர்கள். இது வெறும் குட்-பை மட்டுமல்ல.
என் இதயத்தில் நீங்கா இடம் கொடுக்கும் அளவுக்கு கிடைத்த நினைவுகளுக்கும் அன்புக்கும் நான் சொல்லும் நன்றி. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியம் வாய்ந்தது அன்பே வா தொடர். உங்களுடைய அன்பு இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறது. புரொடக்ஷன் ஹவுஸ் சரிகம தமிழுக்கும், சன் டிவிக்கும் என்னுடைய நன்றி! என்னுடைய திறமையை வெளிக்கொண்டு வர எனக்கொரு பிளாட்ஃபார்ம் உருவாக்கிக் கொடுத்தீர்கள்.
இந்தத் தொடரில் நானும் ஒரு அங்கமாக இருந்ததைப் பெருமையாக நினைக்கிறேன். நினைவுகளுக்கு நன்றி! தொடர்ந்து உங்களது ஆதரவை `அன்பே வா’ தொடருக்கு கொடுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.