சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுதலில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் அதிகாலைமுதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, லியோ சிறப்புக் காட்சி காலை 9 மணிமுதல்தான் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 19ஆம் தேதிமுதல் 6 நாள்களுக்கு லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவுள்ள நிலையில், இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் 6 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளின்படி ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு, வாகன நிறுத்த வசதி உள்ளிட்டவை செய்துதர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுதலில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.