இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நேர்காணலில் அட்லி கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லி இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்.
தற்போது, அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருள் செலவில் இப்படம் உருவாகி வருவதால், புஷ்பா - 2 வசூல் சாதனையை நிகழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.