‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய திரைபடங்களை இயக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் கடைசி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாழை படத்தினை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கவிருக்கிறார். இதற்கடுத்து நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தினை 2025இல் இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பி.கே. ரோஸி திரைப்பட விழாவில் பங்கேற்ற மாரி செல்வராஜ் மாமன்னன் பட திரையிடலுக்குப் பிறகு கேள்வி - பதில் பகுதிகளில், “எனக்கு இந்தப் படம் எடுக்க வேண்டுமென மூளையை அரித்துக்கொண்டே இருந்தது. இந்தப் படத்தினை ஒரே மாதிரி இருக்கிறது எனச் சொல்லலாம். ஆனால் எனக்கு அது பிரச்னை இல்லை. நான் விடுபடுவதற்கான படைப்பாகவே பார்க்கிறேன்.
எனக்கு இருக்கும் அனைத்து கோபத்தினையும் கலையாக மாற்றும் வித்தையை கற்றுக்கொள்ள விரும்பவில்லை. கோபத்தினை மட்டும் கலையாக மாற்றுவது மிகவும் கடினமானது. அதில் உள்ளே போவதும் வெளியே வருவதும் கடினம். எனது வாழ்க்கையை படமாக மாற்றுவது எளிது. எனது வாழ்க்கையில் உள்ள அறத்தை படமாக மாற்றுகிறேன். எனது வாழ்வை முன்வைக்கிறேன். அது மற்றவர்களுக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பது பிரச்னை இல்லை” எனப் பேசினார்.