இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா என்ற இரண்டு வெற்றி படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். தற்போது ரஜினி ஜெய்பீம் இயக்குநருடன் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் பா. ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தினை முடித்துவிட்டு ரிலீஸுக்கு காத்திருக்கிறார்.
தனது படங்களின் மூலம் தலித் அரசியலை முன்வைக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் வானம் கலைத்திருவிழா என்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு விடியோவினால் பா.ரஞ்சித் பேசுபொருளாகியுள்ளார். அந்த விடியோவில், “பா.ரஞ்சித் தனது தலித் அரசியலை நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து பேச வைத்திருக்கிறார். நடிகர் ரஜினிக்கு அந்த அரசியல் புரிந்ததா இல்லையா என்றுக் கூட தெரியவில்லை. ஆனால் ரஜினி வாயால் அதை பேச வைத்தது மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன்” என தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் டாக்டர். பிஜு சென்னையில் நடைபெற்ற பிகே ரோஷி திரைப்பட விழாவில் பேசினார்.
இப்படி பேசும்போது இயக்குநர் ரஞ்சித் சிரித்துக்கொண்டிருப்பார். அதனால் புண்பட்ட ரஜினி ரசிகர்கள் இயக்குநர் பா. ரஞ்சித்தை விமர்சித்து வருகிறார்கள்.
பா.ரஞ்சித் இதற்காக விளக்கமளித்து மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் நன்றிகெட்ட ரஞ்சித் என ஹேஷ்டேக்கினை எக்ஸில் வைரலாக்கியும் வருகிறார்கள்.