'பசி' படத்தின் இயக்குநர் துரை உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இவருக்கு வயது 84.
தமிழ்த் திரையுலகின் மூத்தக் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் கலைமாமணி துரை, உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ‘பசி’ திரைப்படத்திற்கு 1979 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் தமிழக அரசின் விருதுகளும், ஃபிலிம்பேர் விருதுகளும் இப்படத்துக்கு குவிந்தன.
துரை இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகும்.
இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.